கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சமயங்களில் தினமணியில் எழுதிய கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. வெளிவராத ஒருசில கட்டுரைகளும் உண்டு. ஒரே ஒரு கட்டுரை மட்டும் இந்தியா டுடே இதழில் வெளிவந்தது. தொகுப்பு முயற்சிக்காக இக்கட்டுரைகளையெல்லாம் மீண்டும் ஒருங்கிணைத்துப் படிக்க நேர்ந்த இத்தருணத்தில் எல்லா நேரங்களிலும் இக்கட்டுரைகளைப்பற்றி எழுப்பப்பட்ட ஒரு பொதுவான கேள்வி என் மனக்கண்முன் நிழலாடுகிறது. "நீங்கள் ஏன் எதையும் வலியுறுத்தி நிறுவிக் காட்டுவதில்லை?”என்பதுதான் அக்கேள்வி.
இக்கேள்வியை முன்வைத்து யோசிக்கும்போது ஏராளமான எண்ணங்கள் அலைமோதுகின்றன. நான் கையறுநிலையில் ஊமையாக நின்ற வாழ்க்கைத் தருணங்களும் எண்ணங்களை வெளிப்படுத்த விருப்பமில்லாமல் கசப்புடன் வெளியேறிய தருணங்களும் மாறிமாறி நிழலாடுகின்றன. அவற்றின் நடுவே என் இளமையில் நடந்த சம்பவங்களெல்லாம் நேற்று நடந்தவைபோல மிதந்து வருகின்றன.