இலக்கியம் என்பது வாழ்க்கை நிகழ்ச்சிகளின், உணர்வுகளின், சிந்தனைகளின் பிரதிபலிப்பு. நிகழ்ச்சிகளின், உணர்வுகளின் அடிப்படையில் பூக்கும் இலக்கியப் பூக்களைவிட, வாழ்க்கைச் சிந்தனைத் தோட்டத்தில் மலரும் இலக்கியப்பூ அடுத்த தலைமுறைக்கும் இட்டுச் செல்கிறது. வாழ்வினின்று இலக்கியம்; இலக்கியத்தினின்று வாழ்வு என்ற ரீதியில் கருத்துக்களை ஒன்றிலிருந்து ஒன்று பெற்றுக் கொள்கின்றன. ஆனால் இது வெறும் குறிப்பிட்ட சுழல் வட்டமாக அமையாமல், விரிந்து கொண்டே போகும் வட்டமாக அமைகிறது.
இலக்கியத்திற்கு வாழ்க்கை ஆதாரம். வாழ்க்கைக்கு இலக்கியம் ஆதாயம். இலக்கியத்தின் உருவமும் உள்ளடக்கமும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இன்னமும் மாறும். இலக்கியப் போக்குகள் வாய்க்கால் நீராய், ஆற்று நீராய், இலங்குபவை. குளித்து நீராய்த் தேங்கிடில்... நீரே நஞ்சாய் மாறிடும். இந்த மாற்றம், அகம் சார்ந்தாயினும், புறம் சார்ந்தாயினும், அகப்புறம் சார்ந்தாயினும்
இருக்கும்.
தமிழ் உயர்தனிச் செம்மொழி, பண்டைய மொழிகளும் ஒன்றே யெனினும், மாற்றம், வளர்ச்சி, ஒரு மொழி என்ற அளவில் இதற்கும் உண்டு. இலக்கண இலக்கியப் போக்குகள்; கொள்கைகள் - வழித்தடங்கள் - குறிகள் - பார்வைகள் சமூகக் காரணங்களுக்காக மாறிக்கொண்டே வந்துள்ளன. சுமார் இருபது இருபத்தைந்து ஆண்டுகளாகச் சில எழுத்தாளர்களும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களும் "இஸங்கள்'' பற்றிப் பேச ஆரம்பித்தனர்.