மகான்
ஶ்ரீ அரவிந்தர் எழுதி நமக்கு முழுதாகக் கிடைத்துள்ள ஐந்து நாடகங்களில் "
எரிக்கன்" நாடகமும் ஒன்று. இந்தியச் சூழலில் பின்னப்பட்ட " வாசவதத்தை" (
Vasavadutta) என்னும் நாடகத்தையும் கிரேக்கச் சூழலில் புனையப்பட்ட "
விடுவிக்கும் பெர்சியஸ் " ( Perseus, the Deliverer) என்னும் நாடகத்தையும்
மொழிபெயர்த்து முறையே 1996 ஆம் ஆண்டிலும், 2010 ஆம் ஆண்டிலும்
வெளியிட்டபின் இப்பொழுது ஸ்காந்தினேவியச் சூழலில் இயற்றப்பட்டுள்ள "
எரிக்கன்" ( Eric) என்னும் நாடகத்தை மொழிபெயர்த்துவருகிறேன்.
இந்த
மூன்று நாடகங்களிலும் பொதுவாகக் காணப்படுவது அன்பின் ஆற்றல். ஒன்றுடன்
ஒன்று பகைமை கொண்டிருந்த அவந்தி நாடும் வத்ஸ நாடும் வத்ச உதயணனின்
அன்பினால் நட்பு நாடுகளாக மாறுவது வாசவதத்தையில் காட்டப்படுகிறது. நரபலி
கொடுக்கும் மிகக்கொடும் காட்டுமிராண்டித்தனம் நிலவிவந்த சிரியா நாட்டில்
பெர்சியஸின் வீரதீரச் செயலால் அப்பழக்கம் நிறுத்தப்பட்டு இறுதியில் அன்பு
நிலவுவது " விடுவிக்கும் பெர்சிய" ஸில் பேசப்படுகிறது. ' எரிக்கன்" என்னும்
இந்த நாடகத்தில் துண்டு துண்டாகப் பல மன்னர்கள், பிரபுக்கள், கடற்கொள்ளைக்
காரர்களால் ஆளப்பட்ட நார்விய நாட்டை ஒரு குடைக்கீழே கொண்டுவந்த பின்னர்
அவற்றை அன்பினால் ஒருங்கிணைக்க நாடகத்தின் நாயகனாகிய எரிக்கன் எடுத்துக்
கொள்ளும் முயற்சியும் வெற்றியும் விவரிக்கப் பட்டுள்ளது.