கொடுப்பதிலும் பெறுவதிலும் மட்டும் பண்பாட்டை காட்டவில்லை. வீரத்திலும்
பண்பாட்டை விதைத்துச் சென்றவன் தமிழன் இதற்கு காலத்தால் அழியாத பல காவியக்
கதைகளை சுமந்து நிற்கும் புறநானுாற்று நுாலே இதற்குச் சாட்சியாக
இருக்கிறது. எதிரிநாட்டு படையினை தாக்கும் பொழுது கூட ஈரமும் இரக்கமும்
இருந்ததனை காண முடியும்.புறமுதுகிட்டு ஓடுவதும், புறமுதுகில் அம்பு பட்டு
வீழ்ந்து போவதும் அவமானம் எனக் கருதிய பரம்பரை தமிழ்ப்பரம்பரை. போரில்
அடிபட்டு மாண்டு போன தன் மகன் இறந்த செய்தி அறிந்த ஒரு தமிழ்த்தாய்
போர்க்களம் நோக்கி நடக்கிறாள். அப்போது சொல்கிறாள், இறந்து போன என்மகன்
நெஞ்சிலே அம்பு பட்டு இறந்திருக்க வேண்டும்.ஆனால் முதுகில் அம்பு பட்டு
புறமுதுகு காட்டி இறந்து போயிருப்பானேயானால் அவன் வாய்வைத்து பால்குடித்த
இந்த மார்பகங்களை அறுத்தெறிவேன் என்று சபதம் செய்து செல்கிறாள்.
போர்க்களத்தில் நெஞ்சிலே அம்புபட்டு மாண்டு கிடக்கிறான் மகன். அதனை
பார்த்து அவனை ஆரத்தழுவி அழும் தாயைத்தான் சங்க இலக்கியங்கள் நமக்கு
சொல்லிக் கொடுத்து இருக்கின்றன. ஆக வீரத்தில் கூட பண்பாட்டை பதிவு செய்த
இனம்.போரில் தந்தையை இழந்து, கணவனை இழந்து இறுதியில் தனக்குத் உதவியாக
இருக்கும் ஒரே மகனையும் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த புறநானுாற்றுத்
தாயும் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்வோம். இதுதான் தரணிபோற்றிய தமிழர்
பண்பாடு என்பதனை உலகிற்கு உரக்கச் சொல்வோம்.