தமிழ் ஆய்வு இலக்கியம், இலக்கணம், மொழியியல் எனப் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று வருகின்றது. பரந்துபட்ட முறையில் நிகழ்த்தப்பெற்ற தமிழ் ஆய்வு, தற்பொழுது ஒருமுகப் படுத்தப்பெற்ற ஓர் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வாக மாற்றம் பெற்றுள்ளது. அறிவியல் நோக்கில் வளர்ந்து வரும் இன்றைய உலகில் ஆய்வுப்பணியும் கட்டமைப்புடைய, கொள்கைகளுக்கு உட்பட்ட அறிவியல் சார்ந்த ஆய்வாக உருப் பெற்றுள்ளது. தமிழில் ஆய்வு செய்வதற்கு என்ன உள்ளது? இலக்கிய, இலக்கண, மொழியியல் ஆய்வுகளால் சமுதாயத்திற்கு நன்மை விளையுமா? என்ற கேள்விகள் ஒருகாலத்தில் எழுப்பப்பட்டன. பட்டத்திற்கென மட்டும் ஆய்வுகள் நிகழ்த்தப்பெற்ற காலம் மறைந்துவிட்ட நிலையில் உலகம் தழுவிய நிலையில் புதியவற்றை, புதியகருத்துக்களை வெளிக்கொணரும் நோக்கில் பல்துறை ஆய்வுகள் பல தமிழில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சமுதாயத்திற்கும், தனிமனிதனுக்கும் பயன் அளிக்கும் ஆய்வுகள் எங்கு எத்துறையில் மேற்கொள்ளப்பெற்றிருப்பினும் அதற்குப் பெரும் வரவேற்பு உள்ளதைத் தற்பொழுது காண இயலுகின்றது.