விளை பொருள்களின் வளமும் செழிப்பும் அவை பயிராகி முதிரும் புலங்களின் வளத்தையும் உரத்தையும் பொறுத்தனவாதல்போல மொழியின் தூய்மையும் பண்பாடும் அது வழங்கும் நிலத்தையும் பேசும் மக்களையும் பொறுத்தே முடிவு செய்வதற்குரியனவாக இருக்கின்றன. திராவிட மொழி இனங்களுள், பண்பாட்டிலும் ,தூய்மையிலும் நிகரற்ற முதன்மை தமிழ் ஒன்றற்கே உண்டு என்று முடிவு செய்த கிரியர்ஸனும் கால்டு வெல்லும் இதே அடிப்படையில் தான் தத்தம் மொழி ஆராய்ச்சியில் மெய்யுணர்ந்து வெளியிட்டிருக்கிறார்கள்.கால்கள் நடக்கின்ற வழியில்தான் மனமும் நடக்க வேண்டும் என்று நினைப்பதைவிட மனம் நடக்கிற வழியில் கால்கள் நடக்க வேண்டும் என்று நினைப்பது சிறந்தது. மொழி ஆராய்ச்சி என்பது ஆழ்கடலில் அடிப்பகுதியில் முத்துக் குளிப்பதைப் போன்ற செயல். சிப்பியைக் கரைக்குக் கொணர்ந்தபின், விளைந்த நல்முத்தும் கிடைக்கலாம். வெறும் சிப்பியாகவும் போகலாம். எவ்வாறு இருப்பினும் செயல் அருமைப்பாடு உடையதே.