செம்மொழித் தமிழின் சீர்த்திக்கு இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற வளர்ச்சியைக் கண்ட சிறுகதை இலக்கியமும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட முடியாது. காப்பியங்களின் இடத்தை நாவல்கள் பிடித்துக் கொண்டதைப்போல குறுங்காப்பிய இடத்தைச் சிறுகதைகள் பிடித்துக் கொண்டன எனலாம். சிறுகதைக்கு வடிவம் உள்ளடக்கம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. படைப்பவரும் படிப்பவருமே அதன் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும், எழுத்துச் சுருக்கத்தையும் பொருள் உருக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும். அவற்றின் உயிரோட்டத்துக்கும் அவர்களே காரணம்.அவர்களே அவற்றிற்கு வடிவமும் வளமும் சேர்க்கிறார்கள்.
தமிழில் அமைந்துள்ள சிறுகதைகள் பெரும்பாலும் படிப்பவரை ஈர்த்துப் படிப்பினை ஊட்டும் வகையில் கருத்தோட்டம் தேரோட்டமாக இருப்பதைக் காணலாம். முடைநாற்றம் வீசி, கருத்துக்கு ஒவ்வாமல் மூலையில் முக்காடிட்டுக் கிடக்கும் முடங்களுக்கு அறிவூட்டிச் சிந்திக்கச் செய்து பகுத்தறிவினைப் பறைசாற்றிப் பாதை அமைத்துக் கொடுத்துள்ளன. அதற்குத் தந்தை பெரியாரின் சிந்தனைக் கருவூலம் சிறந்த விருந்து. அந்த ஆலமரத்தின் திறமிக்க விழுதாக வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.