19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். ஒரு நூற்றாண்டுக் காலமாக இன்னமும் இவரின் நாடகங்கள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 'காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே பாடலையும், அரிச்சந்திர மயானகாண்டத்தின் 'யாரடி கள்ளி நீ ' பாடலையும் மீண்டும் மீண்டும் பாடச்சொல்லி அப்பாடல்களை மக்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதே தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களுக்குக் கிடைத்திருக்கும் நற்சான்றாகும்.
சுவாமிகள் என்றாலே அது தமிழ் நாடக உலகில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைத்தான் குறிக்கும். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என்று நாடகக் கலைஞர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்.