அது மாலை நேரம், மங்கையரின் முகம் மலர்ந்து புத்தழகு பெற வேண்டிய வேளை. அந்த நேரம் அவள் முகம் உலர்ந்திருந்தது. அவள் தாமரை; தாமரை மாலையில் வாடத்தானே செய்யும் - முகம் மூடத்தானே செய்யும் என்று குமணன் கற்பனையில் மூழ்கவில்லை. "அம்மா உன் மனதைப் புண்படுத்தி விட்டார்களா, தாமரை?' குமணன் பரிவுடன் கேட்டான். "இல்லை" அவள் அழுத்தமாக மறுத்தாள். "அத்தையின் குறையைப் போக்க முடியவில்லையே என்று வருத்தப் படுகிறேன்.'' "குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுங்கள் என்று அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. வீட்டில் இருக்கும் கிழடுகளோ திருமணமான அடுத்த மாதமே மருமகளின் வயிற்றைப் பார்க்கிறார்கள்! என்ன செய்வது?" கேலி பேசி அவளை சிரிக்க வைக்க முயற்சித்தான், குமணன். அவள் முகம் மாறவில்லை. அவன் மெல்ல அவள் முதுகில் தட்டினான். அவனது பக்கமாகத் திரும்பி முகம் மலர்ந்தாள் அவள். வடபழநி கோவிலில் கூட்டம் இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக அவர்களும் மூஞ்சூரு முதல் முருகன் வரை யாரையும் விடாமல் தொழுது வேண்டினார்கள். பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்கள். பிறகு எழுந்து நடந்தார்கள். வெளியில் நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறிக் கொண்டார்கள்.