பதினைந்து ஆண்டுகளாக நைந்து நொந்து வளர்ந்து பனைமரமாக உயர்ந்த ஒடிசலான உடல். மகாபாரதக் கண்ணனைப் போன்ற அமாவாசை மேனி. முடியலங்காரத் தொழிலாளியின் கை பட்டு மாதக் கணக்கில் ஆனாலும். எண்ணெயிட்டு ஒழுங்காக வாரிவிட்ட பெரிய தலை. பால் மனம் மாறவில்லை என்றாலும், பசிக் கனல் படர்ந்த பரந்த முகம். கூர்ந்து நோக்கும் குழிந்த கண்கள். நெட்டான மூக்கு. வெளிறிச் சிவந்து தடித்த உதடுகள். அவைகளின் காவலை மீறிச் சற்றே வெளி நீட்டிய எடுப்பான பற்கள். கொக்குக் கழுத்து. விரிந்த நெஞ்சம். குச்சியாய்த் தொங்கலாடும் மெலிந்த கைகள். ஓநாயைப் போன்ற ஒடுங்கிய வயிறு. சதைப் பிடிப்பற்றுத் தடுமாறும் எலும்பான கால்கள்...