உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவன் கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழனாவான். அப்பெரு வேந்தனின் வரலாறு அவன் பெற்ற வெற்றிகள், நீர்மயமான வெற்றித்தூண் நிறுவியது. அவன்தன் இலச்சினைகள், சிற்பங்கள், ஓவியங்கள், செப்பேடுகள், காசுகள், எடுத்த திருக்கோயில்கள், நிறுவிய புதிய தலைநகரம், கங்கை கொண்ட சோழீச்சரத்தின் சிறப்புகள் எனப் பலவும் காட்ட விழைவதே இந்நூலின் நோக்கமாகும். பேராசிரியர்கள் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், தி.வை. சதாசிவ பண்டாரத்தார், இராஜசேகர தங்கமணி, இல. தியாகராஜன் போன்ற பலர் இராஜேந்திர சோழனின் வரலாற்றை நூல்களாகவோ அல்லது பகுதி பகுதிகளாகவோ படைத்துள்ளனர். அப்பெருமக்கள் கூறாது விடுத்த பல தரவுகளை மையமாகக் கொண்டு உரிய படவிளக்கங்களுடன் விரிநூல் எழுத வேண்டும் என்ற உந்துதலே இப்படைப்பாகும். இராஜேந்திரன் பிறந்தநாள் ஆடி மாதத்து ஆதிரைநாளே என்பதை இந்நூலில் தெளிவுபட விளக்கியுள்ளேன். பஞ்சவன் மாராயன் என்ற பெயருடன் அவன் செய்த சாதனைகள், வங்கத்திலிருந்து கங்கை நீர் எடுத்து வந்தமை, மகேந்திர கிரியில் எடுத்த விஜயஸ்தம்பம் ஜெயஸ்தம்பம் போன்றவை பற்றிய செய்திகளை ஆவணங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளேன். இலச்சினைகள் சிற்பங்கள் போன்றவைகளுக்கு புதிய துலக்கங்கள் தந்துள்ளேன். கால் நூற்றாண்டு தொய்வில்லாமல் உழைத்த உழைப்பின் உருவகமே இந்நூல்.