ஆண்டு 1780.
விஜயதசமி. இரவு நேரம். சிவகங்கை..
தீ பந்தங்களின் ஒளியில் இராஜராஜேசுவரி அம்மன்
கோயில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
பெண்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. அப்பொழுதுதான் கோயிலுக்கு அருகில் வந்த, அந்தப்
பெண், இரு கைகளாலும் கூட்டத்தைப் பிளந்து கொணடு முன்னேறுகிறார். சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள். மகிழ்வைச்
சுமந்த உதடுகள். உடலைச் சுற்றி இறுகப் பற்றியிருக்கும் புடவைக்குள்,
ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.சாதாரணப்
பார்வைக்குப் புலப்படாத வகையில், அப்பெண்ணின் புடவைக்குள் ஓய்வெடுக்கிறது, ஓர் வாள். என்னது வாளா? ஆம் கூர்மையான கொடிய வாளினை மறைத்துக் கொண்டு
கோயிலுக்குள் மெல்ல மெல்ல முன்னேறுகிறார்.கோயில் முழுவதும் பெண்கள்.
கோயிலின் விளக்கு ஒளியில், கூடியிருக்கும் பெண்களை
உற்றுப் பார்ப்போமேயானால், மெல்ல மெல்ல ஓர் உண்மை விளங்குகிறது. நூற்றுக்கு தொண்ணூறு பேர் பெண்களே அல்ல.ஆண்கள்,என்ன ஆண்களா? ஆண்கள்தான். ஆனால் புடவையில், முகத்தின்
மீசையினைச் சுத்தமாய் வழித்து எடுத்துவிட்டுப், பெண்களாய் மாறு வேடமிட்ட ஆண்கள். ஒவ்வொருவரின் உடைக்குள்ளும் பயங்கரமான ஆயுதங்கள்.
அந்தப் பெண் நிதானமாக முன்னேறிச் செல்கிறார். கோயிலின் கருவறைக்கு முன், இறைவியை கண்மூடி,
இருகரம் கூப்பி, வணங்கிக் கொண்டிருக்கும், ஒரு பெண்ணின் தோளைத் தொடுகிறார். மெதுவாய் தலை திருப்பி நோக்குகிறார் அவர். முகத்தை ஊடுருவி, அகத்தினுள் புகுந்து, எதிராளியின்
எண்ண ஓட்டங்களைத் துல்லியமாய படிக்கும், சக்தி வாய்ந்த கண்கள். மிடுக்கானத் தோற்றம்.
இவர் சாதாரணப் பெண்ணல்ல என்பதை முதற் பார்வையிலேயே
உணரலாம்.