பிருந்தாவனத்து கோபிகைகள் கண்ணனை எங்கெங்கும் தேடி, என்னை ஏன் இன்னும் வந்து சேரவில்லை என்று உரிமையோடு கோபிப்பது போன்ற பாடல்.கருணைப் பிரவாகம் எடுக்கும் நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் அமைந்த பாடலாம். காட்சியில் கதாநாயகியின் சார்பாக அவள் காதலனை நோக்கி அவளுடைய தங்கை பாடுவது போல் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.‘செங்கயல் பாய் நீர் திரவரங்கத்தாய் இவள் திறத்தென் செய்கின்றாயே’என்று இரவும் பகலும் கண் துயிலாமல் கண்ணீர் பெருக பெருமாளின் நினைவாகவே உருகிக் கொண்டிருக்கும் மகளின் நிலையை தாயின் பாவத்தில் எடுத்துரைக்கும் நம்மாழ்வார் நினைவுக்கு வருகிறார்.கண்ணாமூச்சி காட்டும் காதலனிடம் தன் சகோதரியின் இதயம் ‘கண்ணாடிப் பொருள்’ என்கிறாள். கவனமாக கையாள வேண்டும் என்று கவிஞர் எவ்வளவு நாசூக்காக சொல்கிறார்.சித்ராவின் கொஞ்சும் குரலில் கண்ணனைக் காணாத ஏக்கம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏற்ற இறக்கங்களிலும் மற்றும் ஸ்வரங்களை மென்மையாக அசைத்தும் பாடலை செறிவூட்டி உள்ளார்.பிருந்தாவனத்து கோபிகையராக பெண்கள் ஒய்யார நடனம் புரிய நடுவில் நாட்டிய மயூரியாக மின்னும் ஐஸ்வர்யாவின் நளினமான நடனம் கொள்ளை அழகு.
இது நம் நாட்டு பாரம்பரிய நடனம் மற்றும் அரபிநடனத்தின் கலவையாக தோன்றுகிறது. தாள வாத்தியங்களையும் அதற்கேற்ப ஆங்காங்கே மாற்றியுள்ளார் இசைப்புயல்.