அதில் அவர் எழுதியுள்ளதைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், பூமிக்கு
வெகு தொலைவில் இருக்கக்கூடிய ஒரு கிரகம். அதில், மொத்தம் ஏழு பில்லியன்
மாந்தர்கள் வசிக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் – சரியாகச்
சொல்லவேண்டும் என்றால் 25,000 ஆண்டுகளுக்கு முன் – தொழில்நுட்பத்தில்
வெகுவாக முன்னேறியிருந்த அவர்களுக்கு, அவர்களது விஞ்ஞானப் பரிசோதனைகளை
நிகழ்த்த ஒரு களம் வேண்டியிருந்ததால் (உள்நாட்டில் அவைகளை நிகழ்த்தத் தடை
இருந்ததாம்), அவர்கள் விண்வெளியெங்கும் தேடிக் கண்டுபிடித்த ஒரு கிரகமே
நமது பூமி. இங்கே வந்து இறங்கிய அவர்களது விஞ்ஞானிகள், பல குழுக்களாகப்
பிரிந்து பூமியெங்கும் சென்று, ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்திய பல
பரிசோதனைகளின் விளைவே மனிதர்கள். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொருவகையில் தங்களது
சிருஷ்டிக்கும் திறனைத் திறம்பட நிகழ்த்தியது. மனிதர்களை மட்டுமல்லாமல்,
அதற்கு முன்னரே பல்வேறு செடிகொடிகளைப் படைத்து, அதன்பின் பல மிருகங்கள்,
பறவைகள் முதலிய உயிரினங்களைப் படைத்தனர். அதில் திருப்தி அடையாமல்,
தங்களைப்போலவே சில உயிரினங்களைப் படைக்க முயன்றதன் பலனே மனிதனின் பிறப்பு.