சித்தர்களின் சிந்தனையில் வியாபித்து அவர்களின் சித்தம் தெளிவடையச் செய்பவளும், சித்தர்களின் மனத்திலும் பக்தர்களின் மனத்திலும் தேன் அருவியாக ஊற்றெடுத்து தேன் போன்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பவள் துர்க்கை. அன்பின் வடிவமானவளும் ,அழகிய உருவில் உள்ளவளும், ஆதியும் அந்தமும் இல்லாதவளும் அணுவாகவும், அணுவிற்குள் அணுவாகவும்,அதன் சக்தியாகவும், அண்டத்தை ஏற்படுத்தி அண்டமாகவும் அன்பர்களின் இதயத்தில் குடியிருப்பவள் துர்க்கை. ஆன்மீகத்தின் ஒளி எதுவோ,ஆணவத்தை அழிப்பது எதுவோ, ஆன்றோர்களின் வாக்காக வருவது எதுவோ, அன்னையின் அன்பு வடிவமானது எதுவோ, அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது எதுவோ, அற்புதங்களை நிகழ்த்துவது எதுவோ, அனைத்திற்கும் அழகைக் கொடுப்பது எதுவோ, அந்த ஆனந்த சக்திதான் ஸ்ரீதுர்க்கை.