நடன நாயகனான சிவனார் அப்படிச் செய்வார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை
யாரும்! நடுவரான ஸ்ரீபெருமாள் மற்றும் தேவர்கள் என அனைவரும் அதிர்ந்தனர்.
சம்பந்தப்பட்ட தேவி, வெட்கித் தலைகுனிந்து நின்றிருந்தாள்.
பின்னே... சிவனார் வலது கையைச் சுழற்றி ஆட, அவளும் அவ்விதமே ஆடினாள். அவர்
இடது காலைச் சுழற்றி ஆட, அவளும் அதற்கு இணையாக ஆடினாள். 'சபாஷ்! சரியான
போட்டி’ என யாவரும் வியந்து நிற்கும் வேளையில், சட்டென்று தனது
காதிலிருந்து குண்டலத்தை விழச் செய்தார் சிவனார். எல்லோரின் கவனமும் அதன்
மீது விழ, கீழே விழுந்த குண்டலத்தைத் தனது கால் விரல்களால் பற்றி எடுத்த
நடனநாயகன், அப்படியே காலை உயர்த்தி, காது வரைக்கும் தூக்கினார்; காலாலேயே
குண்டலத்தைக் காதில் அணிந்துகொண்டார். இதைக் கண்டு விக்கித்து
நின்றுவிட்டாள் தேவி. தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டாள். 'சபையில்
அனைவரும் கூடியிருக்கும் வேளையில், ஒரு பெண்ணானவள் இப்படிக் காலைத் தூக்கி
ஆடுவது எங்ஙனம் சாத்தியம்?’ என்று யோசித்தவளாக, வெட்கமும் அவமானமும்
மேலிடத் தலைகுனிந்து நின்றாள் தேவி.