மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது இடதுசாரி இயக்க நோக்கங்கள் கொண்ட வீதி நாடகங்களை அரங்கேற்றிய மதுரை நிஜநாடக இயக்கத்தோடு இணைந்து வீதி நாடகங்களில் செயல்பட்டவர். அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரியில் தொடங்கப்பெற்ற சங்கரதாஸ் நிகழ்கலைப் பள்ளியின் ஆசிரியராகி மாணவர்களுக்கு நாடகவியல் கற்பித்ததோடு நாடகங்களையும், நாடகவியல் சார்ந்த விளக்கவியல் கட்டுரைகளையும், விமரிசனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
நாடகவியலின் நீட்சியாகத் திரைப்படங்களைக் குறித்து எழுதத் தொடங்கி, தமிழ் வெகுமக்கள் சினிமா உருவாக்கும் கருத்தியல் மற்றும் அரசியல் போக்குகளைக் கட்டுடைத்துக் கட்டுரைகளை எழுதும் விமரிசகராக அறியப்படுகிறார். 1990களுக்குப் பின் புதிய அலையாக எழுந்த தமிழ் தலித் எழுத்துக்களைப் பொதுத் தளத்திற்கு அறிமுகம் செய்த எழுத்துகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது.