டப்பியலைப் போலவே தான் அதற்கு முன் தோன்றிய இலக்கிய இயக்கங்களும் பின் வந்த இயக்கங்களும் ஏதாவதொரு கலை, இலக்கிய வடிவங்களோடு அதிகம் உறவு கொண்டனவாக இருந்தன என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். செவ்வியல் அது மரபுச் செவ்வியல் ஆயினும்சரி, புதுச் செவ்வியல் ஆயினும்சரி கவிதையோடு உறவு கொண்டது. புனைவியல் எப்போதும் கதைதழுவிய கவிதை வடிவமான காப்பியங்களோடு நெருக்கம் கொண்டது. நடப்பியலுக்குப் பின் வந்த பலவும் ஓவியம், சிற்பம், இசை போன்ற கலைவடிவங்களில் அதிகம் பங்களிப்பு செய்தவை.
சாராம்சமாகப் புனைகதை இலக்கியம் நடப்பியலோடு தொடர்புடையது. எழுதுபவர்களின் நோக்கத்திற்கேற்ப நடப்பியல் இயக்கத்தின் பாணியும் வேறுபட்டதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட இடத்தையும், அந்த இடத்தில் வாழும் மனிதர்களையும் எழுதிக் காட்டும் எழுத்தின் தன்மைக்கும், குறிப்பிட்ட காலத்தையும், அந்தக் காலம் பற்றிய பிரக்ஞையை உணர்ந்தவர்களாக மனிதர்களையும் எழுதும் எழுத்தின் தன்மைக்கும் வேறுபாடுகள் உண்டு.