கவிதை வகைமைகளில் தொன்மையானதாக அறியப்படுவது மரபுக் கவிதையாகும். தமிழில் உள்ள யாப்பிலக்கண நூல்கள் மரபுக் கவிதை இயற்றும் முறையை எடுத்துரைக்கத் தோன்றியனவேயாகும். யாப்பு வடிவத்திற்கு அடிப்படை சந்தமும் (Rhythm), தொடையும் ( Rhyme) ஆகும். சந்தம் என்பது அழுத்தமான ஓசையும் அழுத்தமில்லா ஓசையும் சீர்பட அடுக்கி வருவதைப் பொறுத்தது. அழுத்தமுள்ள ஓசையும் அழுத்தமில்லாத ஓசையும் மாறி மாறி இடம்பெறுவதால் ஒரு நயமான ஓசை பிறக்கிறது. மரபுக் கவிதைகள் ஒரு காலத்தில் இசையோடு பாடப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் இவை படிக்கப்படுவனவாக மட்டுமே அமைந்து விட்டன. பாக்களின் ஓசை நயத்துக்குக் காரணமான சொற்களை அளவிட்டுச் சீர் எனக் குறிப்பிட்டனர்.
குறில், நெடில், ஒற்று என்னும் எழுத்துகளால் அசையும், அசையால் சீரும், சீரால் அடியும், அடியால் பாடலும் முறையே அமைகின்றன. சீர்களுக்கு இடையிலான ஓசை தளை எனப்படுகின்றது. சீர், தளை, அடி ஆகியவற்றின் வேறுபாட்டால் பா வகைகள் அமைகின்றன.