திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், ஆன்மிக மக்களுக்காக தோன்றிய உன்னத பூமி. இந்த சங்கரன்கோவில் வட்டத்தில் தான் தென்மலை என்ற கிராமம் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் இருக்கிறது கரிவலம் வந்த நல்லூர். இங்கிருந்து மேற்கு பார்த்த சாலையில் 8 கிலோமீட்டர் தூரம் சென்றால் தென்மலையை அடையலாம்.
இந்த தென்மலையில் தான், பனையூர் ஆண்டவர் என்று அழைக்கப்படும் சங்கரநாராயண சுவாமிகள் தோன்றினார்.
தென்மலையில் வெண்ணைப் பெருமாள் பிள்ளை- பாடகவல்லி தம்பதியர் வாழ்ந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்களாகியும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. ஒரு முறை இந்தத் தம்பதியர், குழந்தை வரம் வேண்டி, சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் ஆலயத்திற்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். அதன்பிறகு அவர்களின் பாதயாத்திரைப் பயணம் பவுர்ணமிதோறும் வாடிக்கையானது.
ஒவ்வொரு பவுர்ணமியிலும் இந்த தம்பதியர் சங்கரன் கோவிலுக்கு வந்துவிடுவார்கள். அங்கே இறைவனை வழிபட்டு, உண்ணா நோன்பும், மவுன விரதமும் இருப்பார்கள்.