கிரண் பேடி என்கிற பெயரை சொல்கிற பொழுதே ஒரு கம்பீரம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆன அவரின் வாழ்க்கை அத்தனை சுவாரசியமானது. பெண்ணால் எதுவும் முடியும் என்று காண்பிக்கும் வாழ்க்கை அவருடையது.
நான்கு பெண் பிள்ளைகளில் ஒருவராக பிறந்த கிரண் பேடியை பெற்றோர் நம்பிக்கை மற்றும் தைரியம் மிகுந்தவராகவே வளர்த்தார்கள். கல்வி மற்றும் டென்னிஸ் இரண்டிலும் அளவில்லாத ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த இவர் ஆசிய சாம்பியன் ஆகியும் சாதித்துக்காண்பித்தார். போலீஸ் துறைக்குள் பெண்கள் நுழைய உள்துறை அமைச்சகம் விடாது என்கிற மாயையை தான் தனித்து நிற்பேன் என்கிற குறிக்கோளின் மூலம் உடைத்து போலீஸ் அதிகாரி ஆனார்.ஒற்றை ஆளாக கலவரம் செய்ய வந்த கும்பலை அவர் விரட்டி அடித்தது ஜனாதிபதி விருதை பெற்றுத்தந்தது. ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் பொழுது டெல்லி போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த இவர் அதை கச்சிதமாகசெய்தார். பிரதமரின் கார் விதிமுறைகளை மீறிய பொழுது அதையும் நிறுத்தி கையகப்படுத்தி கிரேன் பேடி என்று பெயர் பெற்றார்.