உலகத்தையே உலுக்கிய ஒரு காலக்கட்டம் என்றால் கொரோனா காலக்கட்டம் தான். அனைவரையும் வெளியே செல்ல விடாமல் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீட்டிலேயே அடங்கி இருந்த காலம் அது.
அந்த நேரத்தில் வேலை, உணவு, கடன் மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய எவ்வளவு சிரமப்பட்டிருப்போம்.
கொரோனா காலக்கட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவரின் நாட்குறிப்புகளை பற்றியது தான் இந்த புத்தகம்.
பெரு நிறுவனங்கள், நிறைய தொழிலாளர்களை எந்த ஒரு குற்றவுணர்வும் இன்றி பணியிலிருந்து நீக்கம் செய்தன.
இரா. ச. கணேசன் என்ற இயற்பெயர் கொண்ட இந்நூலின் ஆசிரியர் பச்சோந்தி அவர்கள் கொரோனா காலக்கட்டத்தில் பணிநீக்கம் செய்யப்படுகிறார். பணிநீக்கம் செய்யப்பட்ட பின் அவரது வாழ்வு எவ்வளவு ரணம் மிகுந்ததாக இருந்தது, எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை தொகுப்பாக கூறியுள்ளார்.
வேலை இல்லாத போது தான், நாம் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயின் அருமை புரியும். கொரோனா காலக்கட்டத்திற்கு முன் தனியார் பள்ளியில் படித்து வந்த ஆசிரியரின் குழந்தைகள், பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு அரசுப் பள்ளியில் மாறுகிறார்கள்.
எப்பொழுதும் தனியார் பள்ளியினை கடக்கும்போதும் அது "என் பள்ளி" என சந்தோஷத்துடன் கூறும் மகள், தற்போது அதோ பாருங்க அப்பா, "பிரைவேட் ஸ்கூல்" என மனக் குமுறலுடன் கூறுவது , நமக்கே வருத்தத்தை அளிக்கிறது.