ஏங்க என் செல்போனை எங்கேயோ மறதியாக வெச்சுட்டேன், எங்கனு பாருங்க..” - இது என் மனைவி தினந்தோறும் செய்யச் சொல்லும் பணிகளில் ஒன்று. இது கட்டளை இல்ல... ஆனா, கட்டளை தான். காரணம், “நீ எங்கே வெச்சே காணமே” என்று நான் அலுக்கும் குரலில் சொன்னா...” இது ஒரு பதிலா... உங்க போன்ல இருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தால், அது இருக்கிற இடம் தெரியப்போகிறது” என்பாள். நானும் உடனே மிஸ்டு கால் விட்டவுடன், செல்பேசி அவள் பின்னாலிருந்து குரல் கொடுக்கும். எனக்கு முன்பு அவள் முந்திக்கொண்டு “பின்னாலேதான் இருக்கு... இதுக்கு எதுக்கு ரூம் ரூமா அலைஞ்சிங்க” என்று அலுத்துக் கொள்வாள். இது அடிக்கடி நடக்கும். நானும் மிஸ்டு கால் விடாமல், அவள் செல்பேசியை கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போய்க்கொண்டே இருக்கேன். மிஸ்டு கால் தான் அவள் செல்பேசி இருக்கும் இடத்தை காட்டித்தரும்.அறுபதுகளில், டெலிபோன் பணக்காரர்களுக்கு உரிய சாதனம். நாலு தெருவுக்கு ஒரு டெலிபோன் இருந்தால் அது அபூர்வம். அப்போதெல்லாம் டெலிபோன் இணைப்புக்கு விண்ணப்பித்தால், மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது. கிராமங்களில் மிகப்பெரிய நிலச்சுவான்தார் வீட்டில் தான் இருக்கும். அது அந்த கிராமத்தின் அதிசயம்.அப்போது தபால் துறையும், தொலைபேசி இலாகாவும் ஒரே துறை தான்.