கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை
மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடை இடையே விண்மீன்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற சந்தேகத்துடன்
எட்டிப் பார்த்தன.
கீழே பூமியில் அந்தக் காரிருளைக் காட்டிலும் கரியதான ஒரு மொட்டைப் பாறை பயங்கரமான கரும் பூதத்தைப்போல் எழுந்து நின்றது.
பாறையின் ஓரமாக இரண்டு கரிய கோடுகளைப் போல் ரயில் பாதையின்
தண்டவாளங்கள் ஊர்ந்து செல்வதை, ஓரளவு இருளுக்குக் கண்கள் பழக்கப்பட்ட பிறகு
உற்றுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
ரயில் பாதையின் ஒரு பக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி நடந்து சென்றதனால்
ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையில் ஒரு மனிதன் அந்த நள்ளிரவு வேளையில் நடந்து
கொண்டிருந்தான். பாதையைக் கண்ணால் பார்த்துக் கொண்டு அவன் நடக்கவில்லை.
காலின் உணர்ச்சியைக் கொண்டே நடந்தான். ரயில் தண்டவாளத்தின் ஓரமாகக்
குவிந்திருந்த கருங்கள் சல்லிகளில் அவனுடைய கால்கள் சில சமயம் தடுக்கின.
ஒற்றையடிப் பாதையின் மற்றொரு பக்கத்தில் வேலியைப் போல் வளர்ந்திருந்த
கற்றாழைச் செடிகளின் முட்கள் சில சமயம் அவனுடைய கால்களில் குத்தின.