கல்கி அவர்களின் சமூக சிந்தனைகள் இந்த நாவலில் பளிச்சிடுகின்றன. இந்தக் கதையின் நாயகரான சம்பு சாஸ்த்திரி, ஒரு உதாரண காந்தியவாதியாக திகழ்கிறார். ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசம், வரதட்சணைக் கொடுமையினால் திண்டாடுவது, மாமியார் கொடுமை, எல்லா மக்களும் ஒன்று தான் என்ற பார்வையில் சம்பு சாஸ்த்திரி கடைசிவரை ஹரிஜனங்களின் சேரியில் வசிப்பது, மதுவிலக்கு, தேசப்பற்று என்று பல்வேறு சமூக சிந்தனைகளை கல்கி இந்த நாவலில் கையாளுகிறார். கல்கி ஒரு சாதாரண எழுத்தாளர் அல்ல. ஒரு சமூக சிந்தனை உள்ள ,நாட்டுப் பற்று மிகுந்த காந்தியவாதி என்பதை இந்த கதையின் மூலம் நமக்கு நன்கு தெரிய வருகிறது.கல்கி அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். காந்தியவாதி. அவர் எழுத்தைப் போலவே வாழ்ந்தால், அவரது எழுத்தில் உள்ள நேர்மை நம் மனதை தொடுகிறது. எனக்கு இந்த நாவலில் மிகுந்த மகிழ்ச்சியான விஷயம், கல்கி அவர்களின் பல்வேறு நாவல்களைப் போல் சோகத்தில் முடியாமல் சந்தோசத்தில் முடிகிறது.நான் சென்னையில் இருந்து திருச்சி சென்ற போது , ரயில் வண்டியில் இந்த புத்தகத்தை வாசித்தேன். நான் 1930 களில் இருந்த ஒரு உலகத்திற்கு, மனத்தால் சென்றுவிட்டேன் சுற்றுப்புறத்தை மறந்துவிட்டேன். அவ்வளவு அருமையாக எழுதப்பட்ட ஒரு நாவல். ரயில் வண்டி ஏறியது தெரியும். இறங்கியது தெரியும் அவ்வளவு தூரம் இந்த நாவல் என்னை ஆக்கிரமித்து கொண்டது.