வாழ்க்கையெனும் இரயில் பயணத்தில் நம்மோடு பயணிப்பவர்கள் பற்பலர். அற்ப நபர்களின் நினைவுகளை, சற்று நேரத்தில், சந்திப்பு தாண்டியதும் சத்தமின்றி இறக்கி வைத்து விடுகிறோம். சொற்ப நபர்களின் நினைவுகளை மாத்திரம் கர்ப்பக்கிரகத்து சிலைகளென பத்திரமாய் நெஞ்சினில் பதுக்கி வைத்து நித்தம் நித்தம் போற்றுகிறோம்.
கன்னித்தமிழ் பெருமையினை; கணக்கின்றி எனக்கு; காலங்கடந்து நிற்கும் வகையில்; கனிவாய் எடுத்துரைத்து; கவிதைக்குரிய யாப்பிலக்கணத்தை கற்றுக் கொடுத்த – காப்பியங்கள் வடித்த – கண்ணியத்திற்குரிய மறைந்த என் தமிழாசிரியர் நாஞ்சில் ஷாவை கண்டிப்பாய் என் மனதிலிருந்து களைய இயலாது.குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன் “நாஞ்சில்” என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொள்வது அழகுசேர் மரபு. நாஞ்சில் கி.மனோகரன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் சம்பத் நல்லதோர் உதாரணம். நாஞ்சில் மண் பெருமைகளை நெஞ்சத்தின் மஞ்சத்தில் நிரந்தரமாய்ச் சுமந்து போற்றிய வாஞ்சைமிகு ஆசான் என்னாசான்.