அடிமைச் சமூகம் ஏற்பட்டு, சில தலைமுறைகள் சென்ற பின், முன்னால் சுதந்திரமாக வாழ்ந்ததைப் பற்றி அறியாத மக்களிடையே, வாழ்க்கை என்றால் இப்படித் தான் இருக்கும் என்ற கருத்து படர்ந்து விட்டது. இக்கட்டுப்பாட்டை மீற முனையும் அடிமைகளை ஒடுக்குவதற்கு அரசு எனும் ஓர் அமைப்பு இச்சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டது. இது சமூக ஒழுங்கைக் கட்டிக் காப்பதற்குத் தேவை என்ற கருத்தும் பரப்பப்பட்டது.
அடிமைகளிடையே உள்ள கணவன், மனைவி, குழந்தைகளில் ஒருவரை அல்லது சிலரை, ஒரு ஆண்டை இன்னொரு ஆண்டைக்கு விற்று விடலாம். ஆண்டைக்கு அதற்கு முழு உரிமை உண்டு. அது மட்டும் அல்ல; ஆண்டை நினைத்தால் அடிமைகளைக் கொல்லவும் செய்யலாம். அடிமைகள் இதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. இப்படிப்பட்ட சமூகத்தில் அடிமைகள் நிம்மதியாக இருக்க முடிந்தது இல்லை. அதற்கு எதிராகப் போராட்டம் வெடிக்கவே செய்தது. அதற்குத் தலைமை தாங்கியவர் ஸ்பாரர்டகஸ் என்பவர் ஆவார். அவர் தான் இவ்வுலகம் தெரிந்து கொண்ட முதல் சுதந்திரப் போராளி. ஒழுங்கமைந்த பயிற்சி பெற்ற இராணுவத்தின் முன்னால் பயிற்சியே இல்லாத ஸ்பார்டகஸும் அவருடைய தோழர்களும் தோல்வி அடைய நேர்ந்தது. அனைவரும் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் அடிமைகளின் இந்த எழுச்சி ஆண்டைகளை கதிகலங்க வைக்கவே செய்தது.