இடதுசாரிகள் மீதான அம்பேத்காரியர்கள்- தலித் இயக்கங்கள் வைக்ககூடிய அனைத்து விமர்சனங்களும் இருந்தாலும், தலித்களின் விடுதலை இடதுசாரி இயக்கங்கள் இல்லாமல் இல்லை என்ற பார்வையை இப்புத்தகத்தில் டெல்டும்டே அழுத்தமாக வைக்கிறார். தலித் இயக்கங்கங்கள் மீதான விமர்சனத்தையும் அவர் மட்டுப்படுத்தவில்லை. மிக நேர்மையான சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு அவசியமெனக் கருதப்படும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சாதி வெளிப்பாடுகளான வன்கொடுமைகள், பாரபட்சம், இல்லாமைக்கெதிரான போராட்டங்கள் ஆகியவற்றை முன் நிறுத்துகிறார் டெல்டும்டே. எண்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் தலித் இயக்கங்களுக்கு மேலாக இடதுசாரி இயக்கங்கங்கள் இல்லை, பிளவுபட்டுக்கொண்டே இருக்கின்றன. அதேபோல் கம்யூனிச இயக்கங்கங்கள் தற்போது கற்றுவரும் பாடத்திற்கு இணையான பாடங்களை தலித் இயக்கங்கங்கள் கற்பதாகத் தெரியவில்லை எனக் கவலையுடன் விமர்சன பார்வையை நகர்த்துகிறார்.