குழந்தைகளின் உலகில் ஒவ்வொரு கணமும் புத்தம் புதிதாய், பரவசம் மிகுந்ததாய் நகர்கிறது. நிசப்தமும், இருளும் ஆட்சி செய்த தாயின் கருவறையிலிருந்து வெளியேறிய பின், வெளிச்சமும் - சத்தமும் நிறைந்த புற உலகிற்குள் ஊடாடத் தொடங்குகிறது குழந்தை. அப்போது அதற்கு ஏற்படும் குழப்பத்தைப் பற்றிய அறிவியல் உண்மைகளை உதயசங்கர் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் வெளிப்படுத்திக் கொண்டுபோகிறார். தாயின் வயிற்றின் மீது குழந்தையின் தலைப்பக்கத்தை வைத்துவிட்டு விட்டால் அது தானே நகர்ந்து நகர்ந்து சென்று தாயின் மார்புகளைத் தேடி பாலருந்த முற்படும் எனும் எடுத்துக்காட்டு - ஒரு சான்று.
“குழந்தைகளின் உளவியல், புரிந்துகொள்கிற ஆற்றல், கண்டுணரும் திறன், கற்றுக்கொள்ளும் வேகம், உணர்வுகளின் வெளிப்பாடு, கற்பனைத் திறன், அனுபவங்களின் சேகரிப்பு, பகுப்பாய்வு - என குழந்தைகளின் உலகத்திற்குள் ஊடாடுகிற ஓர் ஆரோக்கியமான மனப்பாங்கு தேவையாய் இருக்கிறது” (ப.3) என சுருக்கமான ஒரு முன்னோட்டத்தைக் கடந்து நாம் போகப்போக குழந்தைகளின் அற்புத உலகம் நம் மனக்கண்முன் விரிகிறது.