ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஓ.கே. யூ ஆர் ஓகே. மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும், படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே உற்பத்தித்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும் போதே சமூகமாக வாழவும் அந்தச் சமூகத்தில் ஒற்றுமையாக வாழவும் விழைகிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அமைதியாக வாழவும், படைப்பூக்கம் மிக்கவர்களாக வாழவும் தயாராகிறார்கள். படைப்பூக்கம் மிக்கவர்களே சமூகத்தில் மகிழ்ச்சியும் சாந்தியும் நிலவச் செய்கிறார்கள்.
எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நமது உயிரையும், உடலையும் தன்னிச்சையாக கையாளுவதற்கு உரிமை கிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள், பற்றி அறிந்து கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. இன்னும் சொல்லப்போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்க விளைவுகள், எல்லாவற்றைப் பற்றியும் சொல்லுவதற்குக் கடமைப் பட்டவர்கள் மருத்துவர்கள். எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத்துறைகளைப் போல மருத்துவத்துறையை அவர் படித்திருக்கிறார். அவ்வளவு தான். அதே போல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது.