குங் பூ பிற சண்டை முறைகளில் இருந்து மிக நுட்பமாக பலவிதங்களில் வேறுபடுகிறது. புரூஸ் லீயின் சண்டை காட்சி அமைப்பு சினிமாவில் வன்முறையின் தத்துவத்தையே மாற்றி அமைத்தது. அவர் தனது சினிமா வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் தனது சண்டை முறையின் பின்னுள்ள தாவோயிச தத்துவத்தை விளக்க முயன்றார். உதாரணமாக “Enter the Dragon” இல் ஷாவலின் கோயிலின் தலைமை குருவுக்கு அங்குள்ள மாணவனான புரூஸ் லீக்கும் ஒரு உரையாடல் வரும். குரு கேட்பார்: “சண்டையின் போது உன் எதிரி யார்?”
“எனக்கு எதிரியே இல்லை. ஏனென்றால் மோதலின் போது “நான்” என்கிற பிரக்ஞையே இருப்பதில்லை” என்பார் லீ.
எதிரி என்பவன் நமது மனதின் பிரதிபலிப்பு மட்டுமே என்கிற புரிதல் இந்த பதிலின் பின் உள்ளது. மேலும் சொல்வார் லீ: “என் சண்டை சண்டையே அல்ல, அது ஒரு விளையாட்டு. தீவிரமான விளையாட்டு. ஒரு நல்ல தற்காப்புக் கலைஞன் பதறுவதில்லை, ஆனால் தயாராகிறான். அவன் சிந்திப்பதில்லை, ஆனால் கனவு காண்பதுமில்லை. எதற்கும் தயாராக இருக்கிறான். எதிரி விரியும் போது நான் சுருங்குவேன். அவன் சுருங்கும் போது நான் விரிவேன். ஒரு வாய்ப்பு நேரும் போது நான் அடிக்க மாட்டேன். அது தானாகவே அடிக்கும்.”. இந்த சின்ன விளக்கத்துக்குள் புரூஸ் லீ பயின்ற குங் பூவின் அத்தனை பரிமாணங்களும் வந்து விடுகின்றன.