இவ்வாண்டு தமிழ்ப்படைப்புக்கான இந்தியாவின் உயரிய இலக்கிய விருதாகிய சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய "மின்சாரப் பூ" சிறுகதைத் தொகுப்பு நூலுக்குக் கிடைத்திருப்பது, தமிழ் இலக்கிய உலகுக்கு- குறிப்பாக, முற்போக்கு இலக்கிய உலகுக்குக் கிடைத்த மகத்துவம் மிக்க கௌரவமும் பெருமையுமாகும்.
இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் அவரை நாம் உளமாரப் பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்.
பாரதி, "எமக்குத் தொழில் கவிதை" என்றதுபோல் "எமக்குத் தொழில் இலக்கியம் படைத்தல்" என்று கடந்த 36 ஆண்டுகாலமாக ஒரு முழுநேர இலக்கியப் படைப்பாளியாகப் பணியாற்றிவரும் - அந்த இலக்கிய உழைப்புக்குக் கிடைத்துள்ள ஓர் உயரிய, மதிப்பு வாய்ந்த அங்கீகாரமாகும் இந்த விருது.