book

சாம்பனின் பாடல்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தன்ராஜ் மணி
பதிப்பகம் :பதாகை பதிப்பகம்
Publisher :Padhagai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

தன்ராஜ் மணி இங்கிலாந்தின் கோல்செஸ்டர் பகுதியில் வாழ்பவர். பூர்விகம் சேலம். சேலத்தை மையமாகக் கொண்டு ஒரு சில கதைகளை முதலில் எழுதியவர். கடந்த சில வருடங்களாக அவர் எழுதும் கதைகளின் முதல் வாசகனாக இருந்து வருகிறேன். கதை எழுதுவது பற்றியும் அதைப் பற்றிய பின் கதைகள் குறித்து பேசுவதிலும் மிகவும் ஆர்வமுள்ளவர். பதாகை – யாவரும் பதிப்பகம் வழியாக 2021 ஆம் ஆண்டு வெளியான அவரது “சாம்பனின் பாடல்” தொகுப்பு அவர் கடந்த சில வருடங்களாக எழுதி வரும் சிறுகதைகளின் தொகுப்பு. அவர் ஆரம்ப காலத்தில் எழுதிய கதை முதல் அரூ அறிபுனை இலக்கிய போட்டியில் வென்ற கதை வரை பல விதமான கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

தன்ராஜ் மணியின் கதையில் முதலில் நம்மைக் கவர்வது அவர் கதைகள் நடக்கும் தனித்துவமான இடங்கள். திருமலை மணவாள மாமுனிகளின் சபை, சேலம் புறநகர், மகிழம் எனும் கற்பனைக் கோள் என அவர் தேர்ந்தெடுக்கும் இடங்கள் ஒரு கதாபாத்திரமாகக் கதை நெடுக வலம் வரும். ரெண்டாவது, அவர் சுற்றி வளைக்காமல் சொல்ல வரும் கதைகளன். பெரிய இலக்கிய பீடிகைகளோ, கதை சொல்லும் உத்திகளோ இல்லாமல் மிக இயல்பாகக் கதைக்குள் நுழைந்து சொல்ல வேண்டியவற்றை காட்டிவிடும் திறமை மிக்கவர். தனித்தன்மை மிக்க அவரது தொகுப்பிலிருந்து சில கதைகளைப் பற்றி சில குறிப்புகள் பார்க்கலாம்.

குளிர் உறையும் கனல் – இத்தொகுப்பின் முழுமையான சிறுகதை என இக்கதையைக் கூறமுடியும். முடிவுக்கு அருகே தொடங்கும் கதை ஒரு சிறிய சம்பவம் வழியாக இரு இளைஞர்களின் வாழ்க்கையை வாசகர் முன் வைக்கிறது. பூடகமான சொல்முறை, கதை நெடுக வரும் மையப்படிமத்தின் குறிப்புகள், கச்சிதமான முடிவு என சிறுகதையின் இலக்கணத்தை மீறாமல் எழுதப்பட்டிருக்கு. சிறு நகர் இளைஞர்களின் கதை என்றாலும் இன்று பெரும்பான்மையான இந்திய இளைஞர்களின் குழப்பங்களை மையமாகக் கொண்டு கதை சொல்லப்பட்டுள்ளதால் கதாபாத்திரங்களின் வாழ்க்கை மீறிய ஒரு தரிசனத்தை கதை அடைய முற்பட்டிருக்கிறது. குருவி, செல்லு எனும் இரு நண்பர்கள் ஒரே வாழ்க்கையை வாழுகிறார்கள்.  இரு வேறு குணாதிசயங்களாகத் தொடங்கும் அவர்களது உறவு மெல்ல ஒருவர் மற்றொருவரை நிரப்பும் அதிசயத்தை அடைகிறது.  அதிகம் பேசாமல் ஆனால் திடமாக முடிவு எடுக்கும் செல்லு ஒரு புறம். குருவி அதிகம் பேசுவதோடு துரிதமாகச் செயலாக்கும் திறன் கொண்டவன். மிக இயல்பாக அவர்களாக கதைசொல்லியின் கடைக்குள் புதியவர்களாக நுழைந்து நீண்ட கால நண்பர்களாக மாற முடிகிறது. ஒருவரின் விதி மற்றொருவன் கையில் இருப்பது போல அவர்கள் ரெட்டையர்களாகச் செயல்படுகிறார்கள். வளரிளம் பருவத்தில் இருவரும் வழக்கமான இளைஞர்களாக இருக்கின்றனர். கேஸட் கடை வைத்திருக்கும் கதைசொல்லி மெல்ல கேபிள் சேனல் தொடங்கும் அளவுக்கு வளர்கிறார் – அதோடு தொடர்புடைய வளர்ச்சி இருவரின் மன இயைபில் வெளிப்படுகிறது.  ஒன்றாகப் படம் பார்க்கத் தொடங்குவது முதல் பீர் குடிப்பது வரை அவர்களுக்குள் இருக்கும் இயைபு கதையில் மிக நிதானமாகச் சொல்லப்பட்டிருக்கு. செல்லின் இறப்பை பிறர் இழப்பாகப் பார்த்தாலும், குருவியைப் பொருத்தவரை அது அவனில் ஒரு பகுதி இறந்தது போலத்தான். அதை மீட்டுக்கொண்டு வருவது அவனையே உயிறொடு தக்க வைப்பது போன்றொரு விஷயம். கதை சொல்லி இதை அறிந்திருந்தாலும் பிறரைப் போல நம்ப மறுக்கிறான். போதைப் பொருளின் மயக்கத்தினால் அடிமைப்பட்டுக் கிடப்பதாக எண்ணுவதில் கதை ஒரு திறந்த முடிவை எட்டுகிறது. மனிதனின் விழைவும் அவனது செயல்களுக்கும் இருக்கும் ஆழமான தொடர்பு இங்கு கேள்விக்குட்படுகிறது. செல்லு கூடவே இருப்பதான உணர்வை அடைவதால் குருவி போதைப்பொருளில் ஈடுபடுகிறான். அவனே சொல்வதைக் கூட பிறர் நம்புவதில்லை. குருவி விழைவது போதை தரும் சுகமா செல்லுடன் கழிக்கும் இனிமையா எனத் தெரியாத இடத்துக்கு வாசகரை கதை இட்டுச் செல்கிறது.