book

இனவரைவியலும் நமிழ் நாவலும்

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. சிவசுப்பிரமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :204
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123428475
Add to Cart

பேராசிரியர் நா.வானமாமலையின் முதன்மை மாணாக்கர்களுள் ஒருவரும், சிறந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வறிஞருமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிர மணியன் தற்கால நாவல் இலக்கியத்தின் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தைப் புலப்படுத்தும் விதமாக ‘இனவரைவியலும் தமிழ் நாவலும்’ என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது. மானுடவியலின் ஒரு பிரிவாக வளர்ந்திருக்கும் இனவரைவியல், குறிப்பிட்ட மக்கட் பிரிவினரின் சமுதாய அமைப்பை, கலாசாரத்தை அறிவியலடிப்படையில் விவரிக்கின்ற ஒரு துறையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான இத்துறை, மக்களின் தோற்றம் மற்றும் புற இயற்கைச் சூழல் நிலை, சமுதாய நிலை (பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் முதலானவை), அறிவு மற்றும் கலாசார நிலை ஆகியவற்றை ஆராய்வதில் கவனம் செலுத்தியது. கள ஆய்வையும் அனுபவ வாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட இன வரைவியல், காலனியத் தோற்றகாலப் பயணியர் மற்றும் மிஷனரிமார்களின் எழுத்துக்களினூடே வளர்ந்தது. இத்துறை, சமூக பண்பாட்டு மானுடவியல் துறை சார்ந்தது என்றாலும் அவ்வறிவுத்துறை எல்லையைக் கடந்து சமூகவியல், வரலாறு, தகவல், தொடர்பியல், மொழியியல், பண்பாட்டு ஆய்வியல், நாட்டார் வழக்காற்றியல் ஆகிய பல துறைகளில் பயன்படுத்தப்படுகிற பல்வேறு அறிவுப் புலங்களைக் கடக்கிற ஓர் ஆய்வு அணுகுமுறையாக விளங்குகிறது.

அண்மைக்கால நாவல் இலக்கியத் திறனாய்வில் நாட்டார் வாழ்வியல் அனுபவங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்களை ‘இனவரைவியல் நாவல்’ என வரையறுக்கும் போக்கு காணப்படுகிறது. குறிப்பிட்ட மக்கள் குழுவினரின் இனவரைவியல் கூறுகளை வாழ்வியல் அனுபவங்களுடன் இணைந்து ஒரு நாவலை உருவாக்குகிற பொழுது அது ‘இன வரைவியல் நாவலாகிறது. இன வரைவியல் நாவல், இயல்புநெறிவாதம், யதார்த்தவாதம் ஆகிய இலக்கியப் படைப்பாக்க முறைகளுடன் தொடர் புடையது. ஆங்கிலத்தில் டேனியல் டிஃபோ, கென்கெஸே, பால் ஜெஃபரி சான், நெல்சன் அல்க்ரன் ஆகியோர் உடைய சில நாவல்கள் இனவரைவியல் நாவல்களாக அடையாளப் படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் வாழ்க்கையை, வேறொரு சமூகப் பிரிவைச் சார்ந்த படைப்பாளி உற்றுநோக்கி நாவலாக்கலாம். அவ்வாறின்றி, தான் வாழ்கின்ற, தான் சார்ந்த சமூகத்தின் வாழ்வியல் அனுபவங்களை இனவரைவியல் நோக்குடன் ஒரு படைப் பாளி நாவலாக்குகின்றபொழுது அது ‘தன்வரலாற்று இனவரைவியல் நாவல்’ ஆகின்றது.