உயிர் என்னும் சொல் ‘உய்’ என்னும் வேரிலிருந்து தோன்றியதாகக் கணக்கு. உய்தல் என்றால் வாழ்தல் என்று பொருள். ‘உய், உய்’ என்னும் சீழ்க்கை ஒலியோடு மூச்சிழுப்பு நிகழ்கிறது. மூச்சிழுத்தல்தான் ஒருவர் வாழ்ந்திருப்பதற்கான அடையாளம். மூச்சிழுக்கும் செயலுக்கு உயிர்த்தல் என்று பெயர். பெருமூச்சு விடுவதை நெட்டுயிர்த்தல் (நீளமாக உயிர்த்தல்) என்று சொல்வது இப்போது அற்றுப் போய்விட்ட வழக்கு. பிராண வாயு என்று வடமொழி குறிப்பது தமிழில் உயிர் வளி என்று வழங்கப்படும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது மூச்சிழுத்து வாழ்ந்திருப்பது எதுவோ அது உயிர்.உய்தல் என்ற சொல்லுக்குக் கடைத்தேறுதல் என்றும் பொருள். கடைத்தேறுதல் என்றால் விடுதலை பெறுதல். இந்த அடிப்படையில் பார்க்கும்போது உய்வடையத்தக்கது எதுவோ, அதாவது விடுதலை பெறத்தக்கது எதுவோ அது உயிர். மூச்சிழுத்து வாழ்தல் என்ற நடைமுறை பற்றி வந்த பெயராக இருந்தாலும் சரி, விடுதலை பெறுதல் என்ற இலக்கு பற்றி வந்த பெயராக இருந்தாலும் சரி, உயிர் என்ற பெயர் உயிருக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. நல்லது