கவியரசரது காலடிச் சுவடுகளில் அவர் கொள்முதல் செய்த அனுபவங்கள் தான் அவரது வெற்றிகளுக்குப் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. இதில் அடங்கியுள்ள ஒவ்வொரு செப்பு மொழியும் அனுபவத் தழும்பேறி நிற்பதால் சூடும், சுவையும், நையாண்டியும்,நகைச்சுவையும் சூழ வந்து நம்மை சிந்திக்க வைக்கின்றன. சில வேளைகளில் மனது கொள்ளாது நினைத்து நினைத்துச் சிரிக்கவும் வைக்கின்றன. இந்திய ஜனநாயகம் என்ற சொல் கவியரசரின் மொழியாளுமையில் புது நிறம் பெற்று விளக்கப்படுவது சிரிப்பதற்கு அன்று ;சிந்திப்பதற்கே.சகல துறைகளிலும் அவரது எழுத்துகள் தடம் பதித்திருப்பவை எனினும் இத்தொகுதியில் செப்பிடும் செய்திகள், அறிவுரைகள் பொலியும் புதிய வார்ப்புகள்.இத்தகு சிந்தனைகள் இவருக்கே உரிய வலிமை பெற்ற வாசகங்கள்-நமக்கு வழி காட்டிகள்.