நானிலத்திற்கு நலம் பல சேர்க்க வளமிக்க சொற்களைப் பயன்படுத்தி மொழிக்கு வளம் சேர்க்கும் வல்லமை படைத்தவர் தலைவர் கலைஞர்.மொழியின் செழுமை மூலம், மொழியின் உயர்வின்மூலம் தமிழினத்தின் பெருமையினை உயர்வினை உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உயிர் உள்ளவரை மொழியைத் தம் உயிராக நினைத்து வாழ்ந்தவர் கலைஞர்.
கம்பர், கால்டுவெல், பாரதி, பாரதிதாசன் எனத் தமிழ் வளர்த்த பல சான்றோர்களுக்குச் சிலை எழுப்பி நன்றி செலுத்தியவர் வள்ளுவருக்கு சிலை வடித்தும், வள்ளுவர் கோட்டம் கண்டும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பெயரை நூலக கட்டடத்திற்குச் சூட்டியும் தமிழறிஞர்களுக்கு சிறப்பு செய்தவர்.அவர் காவியங்கள், கவிதைகள், இலக்கியம் என எதுவானாலும் நல்லத் தமிழனைக் கையாளும் வல்லமைப் படைத்தவர். எளிய முறையில் தனது முரசொலி ஏட்டில் உடன்பிறப்புகளுக்கு எழுதும் கடிதத்தின் மூலம் தமிழை வாசிக்க, எழுதக் கற்றுக் கொடுத்து மொழி உணர்ச்சியை ஊட்டியவர்.