கலைஞருக்கென்று பக்கம் ஒதுக்கி,குங்குமம் இதழ் அவரது எழுத்துக்களைத் தொடர்ந்து 'கலைஞர் பக்கம்' என்று வெளியிட்டு வந்துள்ளது. அவற்றைத் தொகுத்து நா. சந்திரபாபு அவர்கள் இந்நூலை உருவாக்கியுள்ளார். 1990 இல் வெளியான இச்சிறு சிறு கட்டுரைகள், இன்று படித்தாலும், சுவைமிகுந்து, சிந்தனைக்கு விருந்தளிப்பனவாக உள்ளன.
'பக்கம்' என்று சொல்லை வைத்து, அவற்றின் பொருளையே ஒரு கட்டுரையாக்கி, நம்மை நூலின் பக்கத்தில் அழைத்துச் செல்கிறது முதல் கட்டுரை. பாரதிதாசன், அண்ணா, எம்.ஜி.ஆர். என இவர்களுடனான நினைவலைகளாகச் சில; இலக்கியச் சோலையில் மணம்பரப்புவனாகச் சில; அரசியல் நிகழ்வுகளை அறியவைப்பன சில என்றவாறு இந்நூலின் கட்டுரைகள் சுவையான விருந்தளிப்பனவாக அமைந்துள்ளன. சர்ச்சில்,நெல்சன் மண்டேலா முதலான வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும், ஆர்மோனியம் தெரு வரலாற்றையும் கலைஞர் தமக்கே உரிய தனித்துவ நடையில் படைத்துச் சென்றுள்ளார்.
பல்வேறு மணம்தரும் பூக்களை உடைய சோலையாய் பலவகைப் பொருள்களையுடைய கட்டுரைகளால் மணம் பரப்பும் இந்நூலை எமது பதிப்பகம் வழி வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.