கலைஞர், சங்க இலக்கியம் முதல், இக்கால இலக்கியம் வரை நன்கு கற்றுத் தேர்ந்தவர். தமிழர்தம் மாட்சியை, எழுச்சியைப் பழைய இலக்கியக் காட்சியை அறிமுகப்படுத்தும் நோக்கில் , பழந்தமிழ் இலக்கியங்களுக்கு, விளக்கம் செய்து, தொண்டு புரிந்தவர் கலைஞர். பெரியாரின் பாசறையில் பயிற்சி பெற்றவர். பேரறிஞர் அண்ணாவின் பெருங்காஞ்சிப் பல்கலைக் கழகத்தில் கலை பலகற்றவர். இளமையில் பெரும்புலவர் தண்டபாணி தேசிகர், சி. இலக்குவனார், முத்துக்கிருட்டின் நாட்டார் ஆகியோரிடம் தமிழ் பயின்றவர். முப்பதாண்டுகளில் உழைப்பில் 354 குறட்பாக்களுக்கும், 300 குறளோவியங்களைத் தீட்டி நூலாக்கம்செய்தது போற்றுதற்குரியது. தமிழர்களின் அறநூலான திருக்குறளுக்கு விளக்கம் தந்து, '' குறளோவியம்'' என்று பெயரிட்டுள்ளது கலைஞரின் தமிழ்ப்பற்றைப் பறைசாற்றுகின்றது.