கார்த்திக் புகழேந்தியின் புனைவுகள் மண்ணில் வேரூன்றி நிற்பன.
அவருடைய கதைகளில் வரக்கூடிய கதாபாத்திரங்கள், காலம், நிலம் இவைபோன்ற ஏனைய
அம்சங்களும் கூட சமகால எழுத்தில் வேறொருவரிடம் காண முடியாது. மண்ணின்
மனிதர்களை வெறுமனே புனிதப்படுத்தாமல் அவர்களிடம் இருக்கும் சத்தியத்தையும்
கீழ்மைகளையும் துரோகத்தையும் வஞ்சகத்தையும் வெஞ்சினத்தையும் அதனதன்
குருதியூற்றிலிருந்து வெளிப்படுத்துகிறார்.
இத்தொகுப்பு அவருடைய முந்தைய கதைகளிலிருந்து வேறொரு மனவுந்தலில் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு இத்தொகுப்பிலுள்ள ‘தலபுராணம்’, ‘வெஞ்சினம்’, ‘கொடிக்கால்’
போன்ற கதைகள் உறுதியான சாட்சிகள். மொழியையும் மண்ணையும் தன் கதைகூறும்
விதத்தால் குழைத்து, இவர் உருவாக்கும் அகவுலகம் வாசகனுள் ஆழமாய் பதியும்
வலிமை கொண்டது. நம் வரலாற்றின் பரணில் காட்சிப் பொருளாய் இருக்கும் மண்
பாத்திரத்தைத் தீண்டும்போது தோன்றும் பண்பாட்டு சிலிர்ப்பு இத்தொகுப்பில்
ஏதேனும் ஓரிடத்தில் ஒவ்வொருவருக்கும் நிகழும் என்பது எனது துணிபு.