ரூபன் சிவராஜாவின் அதிகார நலனும் அரசியல் நகர்வும் புத்தகம் வெளியிடும் வரை இத்தனை காத்திரமான அரசியற் கட்டுரைகளை நூல்களாகக் கொண்டு வரும் திட்டங்கள் எதுவும் இருந்தது கிடையாது. அரசியற் கட்டுரைகளில் நமக்கு ஏற்பு இருக்கின்ற அரசியல் தத்துவமோ அல்லது இலக்கிய/கலைத் தத்துவங்களோதான் அதுவரை பதிப்பிக்கும் நோக்கமாக இருந்து வந்தது. ரூபன் சிவராஜா, ஈழத்திலிருந்து புலப்பெயர்ந்து வாழும் ஒரு ஊடகவியலாளர். ஒரு நிலத்தை இழந்த துயரை அனுபவித்தவன் என்கிற அடிப்படையிலிருந்து அதிகாரம் என்கிற மையத்தைப் பொதுவில் வைத்து உலகம் முழுக்க இழைக்கப்படும் அநீதிகளை,அரசியற் பிழைகளை, வரலாற்றுத் துயரங்களை,வடுக்களை சமநிலை குன்றாது மிகை உணர்ச்சிகளைக் குவிக்காது- நேரடியான தகவல்களை, விளைவுகளை-யூகங்கள் அல்லது சமரசங்களுக்கு உடன்படாத் எழுதப்பட்ட கட்டுரைகளை எழுதும், இதழியல் அறமிக்க இளைஞனின் எழுத்து என்று அது பறைசாற்றியது.