பாவண்ணனின் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு பயணமெனத் தோற்றமளிக்கிறது. கதையின் தொடக்கப்புள்ளி முதல் இறுதிவரை விதவிதமான சூழல்களையும் மனிதர்களையும் காட்டியபடியே செல்கிறார் பாவண்ணன். அச்சித்தரிப்புகள் வழியாகத் திரண்டெழும் கேள்விகளும் விடைகளும் மனஎழுச்சியும் வாசகர்களுக்கு மகத்தான அனுபவத்தை வழங்குகின்றன. கைவிடப்பட்ட எளிய மனிதர்கள் அனைவரும் உண்மையில் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டவர்களே. அந்த இணைப்பின் கண்ணிகளைத் தேடித்தேடி காட்சிப்படுத்துவதில் பாவண்ணனின் சிறுகதைகள் முன்னிலை பெறுகின்றன. கடுமையான துயரங்கள் மிகுந்த சூழல்களிலும்கூட, ஒரு துளி நம்பிக்கைக்கும் வெளிச்சத்துக்கும் இடமிருக்கும் தருணத்தை பாவண்ணனின் சிறுகதைகள் உணர்த்தியபடியே இருக்கின்றன. இந்த நம்பிக்கையும் வெளிச்சமும் பாவண்ணனின் புனைவுலகின் சாரமென்று குறிப்பிடலாம்.