'தமிழரசு' என்ற கருத்தியலை பாரதி தவிர்த்து வேறுயாரும் அக்காலப் பகுதியில் கொண்டிருந்தார்களா என்பது ஆராயத்தக்கது. பாரதி இந்திய விடுதலையைக் கூறியவன்தான். மறுப்பதற்கில்லை. ஆயினும் அவனது பிற்காலப் படைப்புகள் பலவும் அதனை தமிழியமாகச் சிந்தனை மாற்றம் கொண்டதையும் உணர முடிகிறது. தம்பி - நான் ஏது செய்வேனடா! என்று பரலி.சு.நெல்லையப்பருக்கு பாரதி எழுதிய கடிதத்தை அந்த உணர்வின் வெடிப்பாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. பாரதியார் அடிப்படையில் இந்துத்துவவாதி, சமஸ்கிருதப் பற்றாளர், சாதி மேலாண்மையுணர்வு, அதாவது அந்தணன் எனும் உணர்வு கொண்டவர். முரண்பாடு மிக்கவர், நால்வருணப் பாகுபாட்டை ஆதரிப்பவர், ஆரிய இனத்தை அளவுக்கு மீறி ஆராவாரமாகக் கொண்டாடுபவர், பெண் விடுதலையை வேண்டிப் பாடினாலும் ஆணாதிக்க உணர்வு கொண்டவர்,தமிழ்த் தேசிய உணர்வு இல்லை முதலிய பலவிதமான விமர்சனங்களுக்கும் இந்நூலில் உணர்ச்சி வசப்படாமல் பதில் சொல்லப்பட்டுள்ளது.