இத்தொகுப்பில் உள்ள சில கதைகளைப் படிக்கையில், படிக்கிறேன் என்பதையே மறந்துபோய் அந்தக் கதைக் களத்தில் நானும் ஒரு பார்வையாளனாகக் கிடந்தேன். திரு. தியாரூ யதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்று பல கதைகளில் இதயத்தைக் கிள்ளி விடுகிறார். அங்கேதான் எழுத்தின் சக்தியையும் உணர முடிகிறது.
கற்பனையைத் தைப்பதால்தான் கதை என்கிறோம். அந்த கற்பனைக்குக் காரணமும் வாழும் வாழ்க்கைதானே? அப்படி வாழும் வாழ்வில் தான் கண்ட கேட்ட தன்னை பாதித்த உணர்வு நிலைகளை வெகு அழகாய் காட்சிப்படுத்தி இந்த 21 சிறுகதைகளையும் எழுதியுள்ளார் தியாரூ.
இந்தத் தொகுப்பு ஒரு நல்ல அனுபவம். வாசிப்புப் பிரியர்களுக்கு சுவையான ஆரோக்கியமான வெல்லம் கலந்த அவல்.
இந்திரா சௌந்தர்ராஜன்