ஓர் இலக்கியப் படைப்பாளிக்குப் படைப்பாற்றல், இயற்கையிலேயே அமைகிறது. பின்னர், கூர்ந்து கவனித்தல், சிந்தித்தல், கற்பனை வானில் சிறகு விரித்துப் பறத்தல் முதலிய சில குணைக் கருவிகளால் அவ்வாற்றல் மெருகேற்றப்படுகிறது. ஒரு பின்னணியை அடையாளங் கண்டபின், அதற்குத் தொடர்புள்ள (உண்மையான அல்லது கற்பனைப்) பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம், அப்பாத்திரங்களோடு தன்னையும், (படிப்பவர்களையும்) ஐக்கியப்படுத்தும் வகையில், அசாதாரணமான சில திருப்பங்களோடு, அக்கருவை வளர்த்து, நிகழ்வுக்கேற்ற சொற்கோவைகளால் இயல்பாக வெளிப்படுத்துவது ஆகிய திறமைகள் அவர்களோடு இரண்டற ஒன்றியவையே எனலாம். இலக்கியங்கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்...’ என்று நன்னூலாசிரியர் ஒரு சூத்திரத்தில் கூறுவார். இலக்கியம் பயின்றவர்க்கு இலக்கணம் எளிதில் கைவரும். இலக்கணப் புலமை பெற்று இலக்கியத்தில் கைவைக்கும் போது, அப்படைப்பின் உயிரோட்டம் பாதிக்கப்படலாம்! (யாப்பருங்கலக் காரிகை கற்றுக் கவிபாடுவது) கடினமான பாதை என்பது சான்றோரே வெளியிட்ட கருத்தாகும் ஒரு கவிதையின் வெளிப்பாடு உணர்வுகளின் உந்துதலால் இயல்பாகவே நிகழ வேண்டும்! இது சிறுகதை நவீனம் முதலிய துறைகட்கும் பொருந்தும். ஒருவித மனவெழுச்சியே ஒரு படைப்பாளியின் விளைபொருளாகப் பரிணமிக்கிறது. அத்தகைய படைப்புகளே சிறந்தவையாகவும், வாசகர்களால் கொண்டாடப் படுவனவாகவும் இருக்கும்! அவ்வகையில், திரு பாமாகோபாலன், திருமதி வேதா கோபாலன் ஆகிய இல்வாழ்விலும், இலக்கியப் படைப்புப் பயணத்திலும் இணைந்த ‘இவ்விரட்டை எழுத்தாளர்களின்’ சாதனைகள் பாராட்டுக்கு உரியவை.