1830ஆம் ஆண்டு, இன்றைக்கு பெரும் நகரமாக விளங்கும் சின்சுனாடிக்கு சில மைல் தொலைவிலேயே ஒரு அடர்த்தியான, பெரும்பாலும் இடைவெளியே இல்லாத காடு இருந்தது. அந்த மொத்த பிராந்தியத்திலும் எல்லைப் பகுதியிலிருந்து வந்த மக்கள் சிதறலாகக் குடியேறி இருந்தனர். அந்த அமைதியில்லாத ஆத்மாக்கள் வனாந்தரத்திலிருந்து வெட்டி அடுக்கி சுமாரான வீடுகளை உருவாக்கி ஓரளவு வசதியையும் அடைந்திருந்தார்கள் தற்போதைய அளவுகோலில் அதை தரித்திரம் என்றுதான் சொல்ல முடியும். குடுயேறிய உடனேயே தங்களை இயக்கும் ஏதே மர்மமான இயல்புணர்ச்சியால் உந்தப்பட்டவர்களாக, எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு மேலும் மேற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர். புதிய சவால்களையும் துன்பங்களையும் தேடி- அவர்கள் ஏற்கனவே துறந்து விட்டிருந்த சொற்பமான வசதிகளை மீண்டும் கண்டடைவதற்காக. பலர் அந்த இடத்தைக் கைகழுவி விட்டு தூரப் பிரதேசங்களை நோக்கிச் சென்று விட்ட போதிலும் சிலர் அங்கேயே தங்கி விட்டனர். அவர்களில் முதலாவதாக அந்த இடத்திற்கு வந்தவர்களில் ஒருவன் அங்கேயே தங்கி விட்டான்.