காந்தி மகாத்மாவாக உருவானது தென்னாப்பிரிக்காவில்தான். அங்குதான் அவர் சம்பந்தப்பட்ட மனோ உணர்வுகள் நமக்கு நெருக்கமாகத் தெரிகின்றன.
இந்தியாவுக்கு வந்த பின்பு பெரிய நாட்டின் பெரிய தலைவராகிவிட்டார். ஆகவே, இத்தகைய மனஉணர்வுகளை எல்லாம் அவ்வளவு நெருக்கமாக பார்க்க இயலாத அளவிற்கு அவர் சற்றுத்தொலைவில் போய்விட்டார். அதனால் தான் காந்தி வாழ்க்கையில் தென்ஆப்பிரிக்கா சம்பந்தமான அத்தியாயங்கள் ஒரு தனி முக்கியத்துவம் வகிக்கின்றன. அங்கேதான், காந்திக்கு பாலசுந்தரம் என்ற தமிழன் அறிமுகமானார், அவருக்குத் தென்னாப்பிரிக்கவாழ் தமிழர்களுடனான உறவு தொடங்கியது; அங்குதான் காந்திக்கு வள்ளுவம் அறிமுகமானது, அதனால் அவருக்குத் தமிழ் மீது ஆர்வம் பிறந்தது. தங்கத்தின் தரத்தை, உரசிப்பார்த்து அறிய உதவும் கல்தான் 'கட்டளைக்கல்'.
காந்தியின் வாழ்வில், தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் அவர் கைக்கொண்ட 'கட்டளைக்கல்' வள்ளுவர் கூறும் அறமே என்று நிறுவுகிறார் நூலாசிரியர் அ. இராமசாமி.
காந்தியின் வாழ்வு, குறள் கண்ட வாழ்வு என்று சொல்கிறது "காந்தியின் கட்டளைக்கல்".