கணவன் மனைவியிடம் ஏற்பட்டுள்ள விரிசல் எந்த அளவுக்கு குழந்தை உள்ளத்தை பாதிக்கிறது என்பதை சித்தரித்துள்ளார் த.நா.கு. இந்த கதையில்.
"மூளைக்கு
ஒன்றாக விளையாட்டுச் சாமான்கள் சிதறிக் கிடந்தன. ரமணிக்கு எந்த
விளையாட்டிலும் மனம் செல்லவில்லை. வேண்டிய விளையாட்டுச் சாமான்களை அப்பா
வாங்கி வைத்திருந்தார். சேணம் பூட்டிய மரக் குதிரை குப்புற
விழுந்துகிடந்தது.... மேஜை மீது ரயில் வண்டி சரிந்திருப்பதைக்கூட லட்சியம்
செய்யவில்லை அவன். 'ஸெல்லுலாய்ட்' சிப்பாய் கைகால் மடங்கி சோபாவின் கீழே
படுத்திருந்த கண்ணராவியான காட்சி. அவனைத் தூக்கிவிட ரமணி போகவே இல்லை. உதடு
அடிக்கடி வளைந்து துடித்தது. அப்பாவை ஏன் காணோம்?
பெரியவர்களின்
நிஜ உலகில் தடுமாற்றம் ஏற்படும்போது, மெய் என்று நினைத்து, குழந்தைகள்
ஆசைகொள்ளும், அவர்களின் பொம்மை உலகையும்கூட அது பாதிக்கும் என்பதை தனக்கே
உரிய நடையில் ஒரு சொல் ஓவியமாக புனைந்து காட்டுகிறார்... குமாரஸ்வாமி.
கதையைச்
சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே, நடைக்காகவும் சொற்களுக்காகவும்
அனாவசியமாக சிரமப்படுவானேன்? என்று எண்ணுகிற எழுத்தாளர் அல்ல அவர்.
ஜீவனுள்ள பழந்தமிழ் சொற்களைத் தேடிப் பிடித்து, சின்னஞ்சிறு வாக்கியங்களில்
அவர் அதை அமைத்துத் தரும்போது, "கதை எப்படியோ போகட்டும் தமிழனின் அழகை
ரசிப்போம்" என்றே எண்ணத் தோன்றுகிறது. நடையழகுக்காக கதையம்சத்தையும்
பலிகொடுத்து விடவில்லை, குமாரசாமி," என்று வருணித்துள்ளார் குமுதம்
ஆசிரியர் காலம் சென்ற எஸ்.ஏ.பி அவர்கள்.