பண்ணிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆங்கிலேயர்களால் ஜமீன் உரிமை மாற்றிக் கொடுக்கப்படுவதும், சூழ்ச்சியில் மருமகன் உரிமையைப் பெற்றுக் கொள்வது என்ற அந்தக் காலத்து ஜமீன் முறையின் குழிபறிப்பு உள்ளூர் அரசியலையும் பேசுகிறார். உள்ளூர் வரலாற்று புனைவிலக்கிய வகைமையில் இவரின் இப் புது முயற்சி பாராட்டுக்குரியது. எழுத்துலகில் தான் ஒரு எழுத்தாளன் என்று எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் இயங்கிவரும் இவரின் இயல்பு போற்றுதற்குரியது. திமில், வளரி என்ற இரண்டு நாவல்கள் மூலம் புனைவுலகில் புதுத்தடம் பதித்திருக்கும் சகோதரர் அய்யர் லட்சுமணன் அவர்களுக்கு வட்டார வழக்கு வாய்த்திருப்பது போலவே தொடர் முயற்சியில் புனைவு மொழியும் வசப்படுகையில் தமிழ் புனைவுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக நிச்சயம் வலம் வருவார்.