கவிதையைப் பகுத்து, வரையறுப்பதைவிட அதனை இரசிப்பது மனதிற்கு உகந்த காரியம். ஒரு கவிதையை எப்படித் திறப்பது? விழியின் துவாரம் உண்டா அல்லது மனதின் சாவி உண்டா? எங்கு ஆரம்பிக்க? தொடக்கத்திலா, மத்தியிலா அல்லது முடிவிலா? எங்கு கிட்டும் அடி ஆழத்தினை அதிரத்தொடும் அந்த அதிர் நரம்பு?
'வார்த்தைச் சேர்க்கை காதில் ஒரு தரம் ஒலித்து உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி. இரண்டாவதாக, இன்றைய புதுக்கவிதை, இன்றைய சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது. இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாதது போலிருந்து, படிக்கப் படிக்கப் புரியத் தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி. நள்ளிரவில் விழித்துக் கொள்ளும்போது காரணமே இல்லாமல் மனதில் தானே தோன்றிப் புது அர்த்தம் வருகிற மாதிரி இருக்கிறதா? இது நான்காவது கேள்வி. எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம்,ஆம், ஆம் என்று பதில் அளிக்க முடிகிறதோ, அந்தக் கவிதையை நல்ல கவிதை, உயர்கவிதை' என்று நாம் சுட்டி காட்டலாமா?